திருவனந்தபுரம்: உலகக் கிண்ணக் காற்பந்து வெற்றியாளரான அர்ஜெண்டினா அணி, கேரளாவில் விளையாட ஆர்வம் தெரிவித்துள்ளதாக அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் வி. அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
“இதுகுறித்து அர்ஜெண்டினா அதிகாரிகளிடமிருந்து அதிகாரபூர்வத் தகவல் வந்தவுடன் அதற்கான நடவடிக்கையைத் தொடங்குவோம்,” என்றார் அவர்.
கடந்த ஆண்டு இறுதியில் கத்தாரில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் லயனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா மகுடம் சூடியது. தங்களுக்கு ஆதரவு தெரிவித்த கேரள ரசிகர்களுக்கு இந்தியாவிலுள்ள அர்ஜெண்டினா தூதரகம் நன்றி தெரிவித்துக்கொண்டது.
அதனைத் தொடர்ந்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுடெல்லியில் அர்ஜெண்டினா தூதரை நேரில் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.