உலகிலேயே ஆக அதிக மக்கள் வசிக்கும் இந்தியாவின் பல நகர்களிலும் பொதுப் போக்குவரத்து வசதிகள், குறிப்பாக பேருந்துகள் போதிய அளவுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 2019ஆம் ஆண்டு வாக்கில் 1.9 மில்லியன் பேருந்துகள் செயல்பட்டன. அதிகரித்து வரும் பொதுப் போக்குவரத்து தேவைகளை நிறைவேற்ற மேலும் 3 மில்லியன் பேருந்துகள் தேவைப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்து இருக்கிறது.
தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விவரங்களை புதன்கிழமை தெரிவித்தார்.
இந்தியாவில் பொதுப் போக்குவரத்து பற்றாக்குறை ஒருபுறம் இருக்க, காற்று மண்டலத்தில் கரியமில வாயு அதிகம் கலக்கும் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துவிட்டதாக அப்போதைக்கு அப்போது அபாயச் சங்கு ஊதப்பட்டு வருகிறது.
இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வாகனங்களில் இருந்து வெளிவரும் கரிமக்கழிவைக் குறைக்க இந்தியா திட்டமிடுகிறது.
இதைச் சாதிக்க வேண்டுமானால் புதிதாகத் தேவைப்படக்கூடிய பேருந்துகளில் பெரும்பாலானவை மின்சாரத்தில் இயங்குபவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த இந்திய அரசாங்கம் பொதுப் போக்குவரத்து வாகனங்களை மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களாக மாற்ற 576.13 பில்லியன் ரூபாய் (S$9.4 பில்லியன்) முதலீட்டை அங்கீகரித்து இருக்கிறது.
அந்த முதலீடுகளின் உதவியால், 10,000 மின்சாரப் பேருந்துகள் பல நகர்களிலும் இயங்க வழிபிறக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பருவநிலை பிரமுகர் ஜான் கெர்ரியும் இந்தியாவின் கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டேவும் சென்ற மாதம் புதுடெல்லியில் சந்தித்தனர்.
இந்தியாவில் 10,000 மின்சாரப் பேருந்துகளை விரைந்து சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தேவைப்படும் அமெரிக்க நிதி ஆதரவு பற்றி அந்தத் தலைவர்கள் விவாதித்தனர்.
இந்தியாவில் மின்சார வாகன விற்பனை 2022ல் இரண்டு மடங்கிற்கும் மேலாகக் கூடி 1.4 மில்லியனாக இருந்தது.
மின்சாரப் பேருந்துகளை இயக்குவது பெரும்பாலும் லாபகரமானது. என்றாலும்கூட அரசாங்கம் மானியம் அளித்து மின்சாரப் பேருந்துத் திட்டத்திற்கு ஊக்கமூட்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.