லக்னோ: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் மருத்துவச் செலவுகளுக்காக தானியக்க வங்கி இயந்திரத்தை (ஏடிஎம்) உடைத்த மகனைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், நவாப்கஞ்ச் மாவட்டத்தில் நிகழ்ந்தது.
சுபம் என்றழைக்கப்படும் அந்த ஆடவர் கடந்த சனிக்கிழமை விடிகாலை 3 மணியளவில், தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாகக் கூறப்பட்டது.
காணொளிமூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதனைப் பார்த்த அதிகாரிகள், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் அந்த ஏடிஎம் மையத்திற்கு விரைந்துசென்றனர். தங்களைக் கண்டதும் தப்பித்து ஓட முயன்ற சுபத்தைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கூறிய காரணத்தைக் கேட்டு காவல்துறையினர் நெகிழ்ந்துபோயினர்.
தன் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்ட சுபம், அதற்குப் பணம் தேவைப்பட்டதால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாகக் கூறினார்.
இதற்காக யூடியூப் காணொளிகளைப் பார்த்ததாகவும் அவர் சொன்னார்.
காவல்துறையிடம் மாட்டிக்கொண்டதால் சற்றும் கவலைப்படவில்லை என்ற சுபம், பணம் கிடைக்காமல் போனதுதான் வருத்தமாக உள்ளது என்றும் கூறினார்.
அவர்மீது எந்தக் குற்றப் பின்னணியும் கிடையாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.