புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ, நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக் குழுவை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இந்தக் குழு மணிப்பூரில் ஆய்வு நடத்தி 3 அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு தொகையை அதிகரிக்க வேண்டும், அவர்களுக்கான நல்வாழ்வுத் திட்டங்களை அதிகரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன்பு திங்கட்கிழமை வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “குழுவின் அறிக்கைகள் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் விருந்தா கோவர், கீதா மிட்டல் கமிட்டிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கலாம்.
“இந்த அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்து வரும் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கும். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய சட்டச் சேவை ஆணைய கொள்கைகளின்படி, உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கான இழப்பீட்டுத் திட்டங்கள் அதிகரிக்க வேண்டும் என்று கீதா மிட்டல் குழு கூறியுள்ளது. அதுதொடர்பாக நாங்கள் ஆய்வு செய்வோம்,” என்று தெரிவித்தனர்.