திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், நால்வர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் இருவர் தேடப்பட்டு வந்த நிலையில் அவ்விருவரும் காவல்துறையிடம் சரண் அடைந்தததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்கிணறு கிராமததைச் சேர்ந்த மோகன்ராஜ், அவரது சகோதரர் செந்தில்குமார் , தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினாம்பாள் நால்வரையும் செப்டம்பர் 4ஆம் தேதி இரவு, குடிபோதையில் இருந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இதுதொடர்பாக பல்லடம் காவல்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த செல்லமுத்து என்பவரை குண்டடம் அருகே கைது செய்தனர்.
ஆறு மாதத்திற்கு முன்பு பணப் பிரச்சினை தொடர்பாக செந்தில்குமாருக்கும், திருநெல்வேலி மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் இடையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேடப்பட்டுவந்த வெங்கடேஷின் சகோதரர் ராஜ்குமாரும் சோனை முத்தையா என்பவரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும்வரை உடல்களைப் பெறமாட்டோம் எனப் போராட்டம் தொடர்ந்ததால், மோகன்ராஜின் அண்ணன் சிவக்குமார், குடும்பத்தினர் மற்றும் அங்கு திரண்டிருந்த கட்சியினரிடம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்குவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் உறுதி அளித்தார். இதையடுத்து, நால்வரின் உடல்களைப் பெற்றுக்கொள்ள நேற்றுப் பிற்பகல் ஒப்புக்கொண்டனர்.