சனிக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி, ஜூரோங் குழும சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஏற்பாடு செய்த ‘சித்திரை வானவில்’ கொண்டாட்டங்கள், மாலை 5.30 முதல் 9 மணி வரை கிளமெண்டி சமூக மன்றத்தில் நடைபெற்றன.
800க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வண்ணமயமான பாரம்பரிய உடைகளில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
ஜூரோங் குழுத்தொகுதி மற்றும் புக்கிட் பாத்தோக், யூஹுவா தனித்தொகுதிகளின் அடித்தள ஆலோசகர்கள் வழிநடத்திய ஒளியூட்டுடன் கொண்டாட்டம் துவங்கியது. அடித்தள ஆலோசகர்களை வரவேற்க, ‘பிரபஞ்ச ஆற்றல் குடில் சிங்கப்பூர்’ குழு பறை இசை எழுப்பினர்.
நெறியாளராக உள்ளூர்க் கலைஞர் சஜினி நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
நிகழ்ச்சியின் முக்கிய அங்கங்களில் ஒன்றாக, ஜூரோங் செண்ட்ரல் தன்னார்வக் குழுவின் மூத்தோர், யோகா பயிற்சி செய்து ஆரோக்கியத்தை வலியுறுத்தினர். கிளமெண்டி சமூக மன்ற தன்னார்வக் குழுவின் பாரம்பரிய ஆட்டமும் மக்களைக் கவர்ந்தது.
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற கருப்பொருளில் சிறுவர்களின் நாடகம் இடம்பெற்றது.
பாலர் பள்ளி முதல் வகுப்பு தொடங்கி தொடக்கநிலை மூன்று வரையிலான மாணவர்களுக்குக் கதைசொல்லுதல், இந்தியர்-மற்ற இனத்தவர் இணைந்து ரங்கோலி வரைதல், தமிழ் எழுத்துகள் கொண்டு தேநீர் ‘கோஸ்டர்’கள் தயாரித்தல், ‘டமியா’ உந்துவண்டி விளையாட்டு, பலூன் வடிவமைத்தல் எனப் பல நடவடிக்கைகள் நடைபெற்றன.
மணிமாறன் நடனக் குழுவினர், பாடகர்கள் சுபாஷினி, குணா ஆகியோரும் தங்களின் படைப்புகளின்வழி மக்களை உற்சாகப்படுத்தினர்.
சிண்டா, யுவபாரதிப் பள்ளி, சுகாதார மேம்பாட்டு வாரியம், பிரபஞ்ச ஆற்றல் குடில் சிங்கப்பூர் ஆகியவை சாவடிகள்மூலம் பொதுமக்களைச் சென்றடைந்தன.
இந்நிகழ்ச்சி சமூகத்தை இணைத்ததோடு தமிழ் மரபை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் சென்றது.