புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சென் ஹுவாங்கை சந்தித்துப் பேசினார். கணினிச் சில்லு தயாரிப்பில் முன்னணி வகிக்கும் அந்த நிறுவனம் தற்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் கால்பதித்துள்ளது.
அவ்வகையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு குறித்து எக்ஸ் டுவிட்டர் வலைத்தளப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
“செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவுக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசினோம். இந்தத் துறையில் ஏற்கெனவே இந்தியா சாதித்துள்ளவற்றை ஜென்ன்சன் ஹுவாங் பாராட்டினார். மேலும் இந்தியாவில் தொழில்நுட்பத் திறன் வாய்ந்த இளைஞர்கள் இருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவிப்பதாகக் கூறினார்,” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.