சென்னை: முகப்பேர் பகுதியில் மீன்கடை நடத்திய ஜெகன் எனும் 48 வயது ஆடவர் ஓட, ஓட விரட்டப்பட்டு, வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு, முகப்பேர் மேற்கு, ரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள தன் மீன்கடையில் இருந்தார் ஜெகன். அப்போது திடீரென ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் மீன்கடைக்குள் புகுந்தது.
அவர்களிடம் இருந்து தப்பிக்க, கடையில் இருந்து வெளியேறிய ஜெகன் சாலையில் ஓடினார். ஆனாலும் அவரை விரட்டிச் சென்ற கும்பல் ஓடும்போதே அவரைச் சரமாரியாக வெட்டிய்து.
தலையிலும் கழுத்திலும் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெகன், சம்பவ இடத்திலேயே மாண்டார்.
கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். கொலை நடந்த இடம் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் இது பழிவாங்கும் நடவடிக்கை எனத் தெரியவந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த ஜெகனின் அண்ணன் மதன், 2015ஆம் ஆண்டு தேர்தல் முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அதற்குப் பழிவாங்க 2021ஆம் ஆண்டு ராஜேஷ் கொலையுண்டார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெகன் பிணையில் வெளிவந்து பின்னர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. ராஜேஷின் நண்பர்கள் ஜெகனைத் தீர்த்துக்கட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.