கோல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மம்தா தலைமையிலான மாநில அரசுக்கும் ஆளுநர் சி.வி. ஆனந்த போசுக்கும் இடையில் அதிகார மோதல் இருந்து வருகிறது.
பல்கலைக்கழங்களுக்ககான இடைக்கால துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்ததை அடுத்து இந்த மோதல் பெரியதாகிவிட்டது.
இவ்வாறு தொடர்ந்து ஆளுநர் செயல்பட்டால், ஆளுநர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபடுவேன், ஆளுநருக்குத் துணை போகும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் நிதிக்கு முட்டுக்கட்டை போடப்படும் என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியிருந்தார்.
ஊழல் இல்லாத பல்கலைக்கழகம் என்பதை உறுதிப்படுத்துவதுதான் தனது பணி என போஸ் அதற்குப் பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில், மேற்கு வங்காள கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு, ‘‘உயர்க்கல்வி முறையை அழிக்க முயற்சி செய்கிறார். பல்லைக்கழகங்களில் ஆளுநர் பொம்மை ஆட்சி நடத்துகிறார்’‘ என ஆளுநர் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், ஆளுநர் இரு ரகசிய கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளார். ஒன்றை மத்திய அரசுக்கும், மற்றொன்றை மாநில அரசுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியின்போது இது பற்றி கேட்டதற்குப் பதில் அளித்த ஆளுநர், ‘‘நள்ளிரவு வரை காத்திருங்கள். என்ன நடவடிக்கை என்பதை நீங்கள் பார்ப்பீர்கள்,’‘ என்று சனிக்கிழமை குறிப்பிட்டார்.
இதற்குச் சில நிமிடங்களில், கல்வி அமைச்சரின் பதிலடி வெளியானது.
‘’நள்ளிரவு வரை பார்க்கவும், நடவடிக்கையைப் பார்க்கவும். எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை! நகரில் புதிய காட்டேரி! மக்களே உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்திய புராணங்களில் கூறப்படும் அசுரன் இருட்டு நேரத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறது,’‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.