ஸ்ரீநகர்/புதுடெல்லி: நான்கு ஆண்டுகளாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மிர்வைஸ் உமர் ஃபாரூக்கை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்தனர்.
அதையடுத்து, ஸ்ரீநகரில் இருக்கும் ஜாமியா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையை அவர் வழிநடத்தினார்.
முஸ்லிம் பெரும்பான்மை பகுதியான காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 2019ல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தடுத்து வைக்கப்பட்ட ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளில் ஃபாரூக்கும் ஒருவர்.
ஜாமியா பள்ளிவாசலின் தலைமை இமாமான அவர், அங்கு தொழுகைக்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் பிரசங்கம் செய்தார்.
“எனது உரிமைகளும் சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டன. நாங்கள் பிரிவினைவாதிகளோ அமைதியைச் சீர்குலைப்பவர்களோ அல்ல. பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவே நாங்கள் விரும்புகிறோம்,” என்றார் திரு ஃபாரூக், 50.
உயர் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ஃபாரூக்கும் சமய போதகர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டதாக இந்திய அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஷ்மீரில் அமைதியைக் கட்டிக்காக்க அவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது முக்கிய நடவடிக்கையாக இருந்து வந்தது என்று அந்த அதிகாரி கூறினார்.
“காஷ்மீரின் ஒரு பகுதி இந்தியாவைச் சேர்ந்துள்ளது. மற்ற இரு பகுதிகள் பாகிஸ்தானையும் சீனாவையும் சேர்ந்துள்ளன. மூன்று பகுதிகளும் இணைக்கப்பட்ட பிறகு அவை முழுமையடையும் என நாங்கள் நம்புகிறோம்,” என்று கூறிய ஃபாரூக், அமைதித் தீர்வையே தாம் நாடுவதாகக் குறிப்பிட்டார்.
ஃபாரூக்கிற்கு 17 வயதாக இருந்தபோது ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாமானார்.
காஷ்மீரில் கிளர்ச்சி ஏற்பட்டதையடுத்து, 1990ல் ஃபாரூக்கின் தந்தை துப்பாக்கிக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.