புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணிக்கு 2027ஆம் ஆண்டு வரை அதிகாரபூர்வ ஆதரவாளராக இருப்பதற்கு ட்ரீம்11 என்ற நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் இயங்கும் ஒரு பிரிவாக செயல்படும் பொருள் சேவை வரி புலனாய்வுத் தலைமை இயக்குநரகம் ட்ரீம் 11 நிறுவனம் ரூ.40,000 கோடி பொருள் சேவை வரி முறைகேடு செய்துள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நிறுவனத்தின் மீது ரூ.40,000 பொருள் சேவை வரி செலுத்தாமல் வரிஏய்ப்புச் செய்ததாக வரித்துறை வழக்குத் தொடுத்துள்ளது.
2017-2018, 2018-2019 ஆகிய காலகட்டங்களில் பொருள் சேவை வரி ஏன் கட்டவில்லை என்பதற்கு ட்ரீம்11 நிறுவனம் 30 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று வரித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
அதை எதிர்த்து அந்நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ட்ரீம் ஸ்போர்ட்ஸ் என்னும் நிறுவனம் மனுச் செய்துள்ளது.
ட்ரீம்11 நிறுவனம் கிரிக்கெட் போட்டிகளுக்கான பந்தயங்களின் மதிப்பில் 28 விழுக்காடு ஜிஎஸ்டியை செலுத்தத் தவறியது.
இது ஏன் என்று வரித்துறை அந்த நிறுவனத்தில் விளக்கம் கேட்டுள்ளது. அந்நிறுவனத்தின் வரி ஏய்ப்பு நிரூபிக்கப்பட்டால், இந்தியாவின் மறைமுக வரி வரலாற்றில் இரண்டாவது பெரிய முறைகேடு இதுவேயாகும்.
முன்னதாக பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கேம்ஸ்கிராஃப்ட் நிறுவனம் ரூ.21,000 கோடி பொருள் சேவை வரி முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனமும் அதை எதிர்த்து முறையீடு செய்துள்ளது.
‘ஃபேண்டஸி கேமிங்’ துறையில் அந்த நிறுவனத்தின் மதிப்பீடும் பயனர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கான விளம்பரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் நடித்துள்ளனர்.
‘ஃபேண்டஸி கேமிங்’
நடந்துகொண்டிருக்கும் ஒரு விளையாட்டில் களத்தில் உள்ள வீரர்கள், எந்த நேரத்தில் எப்படி ஆடுவார்கள் என்பதைக் கணித்து, கற்பனையில் நாமும் சேர்ந்து விளையாடும் விளையாட்டே ஃபேண்டஸி கேமிங் என்பதாகும்.