புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் இவ்வாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், பாஜக சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர். பெண்களை சாதி ரீதியாக பிளவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் முயற்சி செய்கிறது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஆயிரம் ஆண்டுகளுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
“ஏழைகளுக்கு காங்கிரஸ் கட்சியைப் போல் வேறு எந்தக் கட்சியும் அநீதி இழைத்ததில்லை. கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க உத்தரவிட்டேன். ஆனால் சத்தீஸ்கர் அரசு அதிலும் ஊழல் செய்தது. சத்தீஸ்கரில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அனைத்து ஏழை மக்களுக்கும் தரமான வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே முதல் முடிவாக இருக்கும்,” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.