திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கனமழை நீடிப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கனமழை மேலும் ஐந்து நாள்களுக்கு பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்து உள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகளில் புதன்கிழமையும் மழை தொடர்ந்து பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால், மாநிலத்தில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து அபாயகட்டத்தை எட்டியுள்ளது.
உயிரிழப்பு பற்றி இன்னும் தகவல் கிடைக்காத நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி வாமனபுரம் ஆற்றில் ஒருவர் காணாமல் போனார், அவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளத்தில் ஐந்து நாள்களுக்கு கனமழை பெய்யும். கனமழை காரணமாக, திருவனந்தபுரத்திற்கு அதிக கனமழையைக் குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
வியாழக்கிழமையும் தீவிர வானிலை நிலவரம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அடுத்த 4 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.