புதுடெல்லி: அண்மையில் நியூஸ்கிளிக் ஊடக நிறுவனத்தில் டெல்லி காவல்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. அதையடுத்து, இந்தியாவில் உள்ள ஊடக சங்கங்கள், இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளன.
முக்கியமாக தலைமை நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்று அவை கோரிக்கை விடுத்துள்ளன.
டிஜிபப் நியூஸ் இந்தியா ஃப்வுண்டேஷன், இந்தியன் உமன்ஸ் பிரஸ் கார்ப்ஸ், பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் இணைந்து உச்ச நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியுள்ளன.
மத்தியில் ஆளும் பாஜக அரசால் நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான செய்தியாளர்கள் பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில் பெரும் அழுத்தத்துடன் பணியாற்றுவதாக அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டின் அரசியல் சாசனத்தை மீறுபவர்கள் அனைவரும் அதற்குப் பதிலளிக்க வேண்டியவர்கள்தான் என்பதை வலியுறுத்தி அதிகார வர்க்கத்தின் அழுத்தத்தை எதிர்கொள்வது இப்போது அவசியமாகியுள்ளது என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்கள் அச்சுறுத்தப்படுவது ஜனநாயகத்துக்கு எதிரானது. நாங்கள் சட்டத்துக்கு உட்பட்ட அனைத்து விசாரணைகளுக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால், திட்டமிட்டு ஏவப்படும் விசாரணைகள், சோதனைகள், பொருள்கள் பறிமுதல்கள் ஆகியவை ஏற்கத்தக்கல்ல. இது ஜனநாயக நாடு. இந்தியா ஜனநாயகத்தின் தாயகம் என்று நம்மை நாம் விளம்பரப்படுத்திக் கொள்கிறோம். அப்படியிருக்க இத்தகைய செயல்கள் சரியானவை அல்ல,” என்று அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்காலத்தில் ஊடக நிறுவனங்களில் காவல்துறை சோதனை மேற்கொள்ளும்பட்சத்தில் செய்தியாளர்களிடம் இருந்து தகவல் சாதனங்களைப் பறிமுதல் செய்வதற்கென வழி காட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அதேவேளையில் செய்தியாளர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படுவதிலும் வழிகாட்டுதல் தேவை என்று அச்சங்கங்கள் நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்துள்ளன.
டெல்லி காவல்துறை நியூஸ்கிளிக் ஊடகச் செய்தியாளர்களிடம் அதிரடிச் சோதனை மேற்கொண்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.