புதுடெல்லி: மைக்ரோசாஃப்ட் இந்தியா, அதன் மொழிபெயர்ப்புச் சேவையில் புதிதாக போஜ்புரி, போடோ, தோக்ரி, காஷ்மிரி ஆகிய மொழிகளை இணைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
அவற்றையும் சேர்த்து மொத்தம் 20 மொழிகளில் தற்போது அது மொழிபெயர்ப்புச் சேவையை வழங்குகிறது.
ஏற்கெனவே அசாமிய மொழி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது போன்ற இந்திய மொழிகளில் அது சேவை வழங்குகிறது.
புதிதாக இணைக்கப்பட்ட நான்கு மொழிகளையும் சேர்த்துப் பார்த்தால், இந்தியாவின் பெரும்பாலான அதிகாரத்துவ மொழிகளிலும் இச்சேவை கிடைக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 61 மில்லியன் பேர் பலனடைவர் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் 22 மொழிகள் அதிகாரத்துவ மொழிகளாக உள்ளன. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்தியாவில் 95 விழுக்காட்டு மக்களுக்கு மொழிச் சேவையை வழங்குவதாகக் கூறப்படுகிறது.