புதுடெல்லி: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றப் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் முடிவுறுகிறது.
இந்நிலையில், அந்த ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணயம் அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதியும், மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதியும் என ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த ஐந்து மாநிலங்களின் தேர்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
மத்தியப் பிரதேசம்
மொத்தம் 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசம் இப்போது சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆளும் மாநிலமாக உள்ளது. இங்கு பாஜக கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறது. இங்கு போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கானா
தெலுங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. இங்கு சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.
தெலுங்கானாவில் ஆளும் பாரத ராஷ்டிர சமிதி, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கானாவில் இப்போது கேசிஆர் தலைமையிலான பிஆர்எஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் உருவானது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது.
சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 தொகுதிகள் உள்ளன. அங்கு புபேஷ் பகேஸ் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு பாஜக, சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளே காங்கிரசுக்குப் போட்டியாகப் பார்க்கப்படுகிறது.
மிசோரம்
மிசோரம் மாநிலத்தில் 40 தொகுதிகளே உள்ளன. அங்கு மிசோ தேசிய முன்னணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் போட்டியிட உள்ளன.
ராஜஸ்தான்
மொத்தம் 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளே முக்கிய கட்சிகளாகப் பார்க்கப்படுகின்றன.
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்படும் 5 மாநில தேர்தல்களின் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.