டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் பேருந்து ஒன்று விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை இரவு, பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்ததில் ஏழு பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 28 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என மாநிலப் பேரிடர் மீட்புப் படை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
நைனிடாலில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த பேருந்து, கலதுங்கிச் சாலையில் காட்காட் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மாநிலப் பேரிடர் மீட்பு படை, தீயணைப்புத் துறை, நைனிடால் காவல்துறையினர் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
காயமடைந்தவர்கள் ஹல்த்வானியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புனேயில் விபத்து
இன்னொரு சம்பவத்தில், புனேயில் நடந்த மினி பஸ் விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். அந்தப் பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகளில் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு 2 மணி அளவில் வரந்தா காட் என்ற இடத்தில் உள்ள போர் - மகாத் சாலையி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.