பெங்களூரு: பெங்களூரை அடுத்த பிதலூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத், 45, கோழி இறைச்சி விற்பனை செய்பவர்.
இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் கவனா, 20, தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார்.
இரண்டாவது மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்தவரைக் காதலித்ததை அறிந்து மஞ்சுநாத் கண்டித்தார். ஆனால், அப்பெண் கடந்த 10ஆம் தேதி தன் காதலனுடன் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
அந்தப் பெண்ணின் வயது 17 என்பதால் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் தங்கைக்கு கவனா உதவி செய்திருக்கலாம் என்று மஞ்சுநாத் சந்தேகித்தார்.
இந்நிலையில், கவனா தானும் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளையரைக் காதலிப்பதாகக் கூறியதைக் கேட்டு மஞ்சுநாத் அதிர்ச்சி அடைந்தார்.
தந்தை கண்டித்தும் கவனா தனது காதலைக் கைவிடவில்லை. இதனால் மகளிடம் சண்டையிட்ட மஞ்சுநாத், வாக்குவாதம் முற்றிய நிலையில் இரும்புக் கம்பியால் கவனாவைத் தாக்கினார்.
படுகாயம் அடைந்த கவனா மயங்கி விழுந்தபோது, கோழி அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியால் அவரது கழுத்தை மஞ்சுநாத் அறுத்தார்.
பின்னர் காவல்துறையிடம் சரணடைந்த மஞ்சுநாத், தன் மகளை ஆணவக்கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் கூறியது உறுதியானதை அடுத்து, காவல்துறையினர் மஞ்சுநாத்தைக் கைதுசெய்தனர். விசாரணை தொடர்கிறது.