புதுடெல்லி: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி எழுதிய பாடல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இந்தப் பாடல் வெளியான ஐந்து மணி நேரத்தில் ஐந்து லட்சம் பேர் ரசித்துள்ளனர்.
பிரதமர் மோடி, நவராத்திரி விழாவுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாடலை எழுதியிருந்தார்.
அந்தப் பாடலுக்கு தற்போது இசையமைத்து வீடியோ ஆல்பமாக வெளியிடப்பட்டுள்ளது. 190 விநாடிகள் ஓடக்கூடிய இந்த பாடல், கர்பா வகைப் பாடல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த பாடல் வெள்ளிக்கிழமை டெல்லியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது என ‘த இந்து’ தகவல் தெரிவிக்கிறது.
பாடகி த்வனி பனுஷாலி குரலில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு இசை அமைப்பாளர் தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார்.
இப்பாடல் கலாச்சார பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
‘‘பிரதமர் நரேந்திர மோடியுடன் பணியாற்றியது எனக்குப் பெருமையாக உள்ளது. அனைவருக்கும் பிடித்த வகையில் பாடல் அமைந்துள்ளது,” என்று இப்பாடலின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி கூறியுள்ளார்.
பாடல் குறித்து பேசிய பாடகி த்வனி பனுஷாலி, “மீண்டும் பிரதமர் மோடியுடன் ஒரு புதிய பாடலுக்கு கூட்டணி அமைக்க விரும்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரதமர் மோடியின் பாடல் வெளியான ஐந்து மணி நேரத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரசித்துள்ளனர். மேலும் இந்தப் பாடலை ஏராளமானோர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “இந்தப் பாடல் எனக்கு பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. தற்போது வெளியான இந்தப் பாடல் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.