அய்ஸ்வால்: வரும் நவம்பரில் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் மிசோரமும் ஒன்றாகும். இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி காங்கிரஸ் சார்பில் இங்கு பிரசாரத்தை தொடங்கி வைக்கவும் 2 நாள் பயணமாகவும் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று மிசோரம் வந்தார். தலைநகர் அய்ஸ்வாலின் சன்மாரி சந்திப்பில் இருந்து ஆளுநர் மாளிகை வரை சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு அவர் நடைப்பயணம் மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால் மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. இது எனக்கு மிகுந்த வியப்பளிக்கிறது.
மணிப்பூர் இரண்டாக உடைந்து கிடக்கிறது. ஏராளமான மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் கொல்லப்படுகின்றன. அங்கு இரு சமூகத்தினரிடையே வெடித்த வன்முறையால் கடந்த மே மாதம் முதல் பல கொடுமைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால், இன்றுவரை நம் பிரதமர் அங்கு சென்று சூழ்நிலையை அறிந்து அங்கு இரு சாராருக்கும் இடையே நடக்கும் பிரச்சினையைத் தீர்த்து வைத்து அமைதியை நிலைநாட்டுவதில் அக்கறை செலுத்தவில்லை. இது வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்த நாட்டின் ஒவ்வொரு மதம், கலாசாரம், மொழி, பாரம்பரியம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக என் தலைமையில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், பாஜகவோ அந்த நோக்கத்தை அழிக்கும் செயலையே மணிப்பூரில் செய்துள்ளது என்று ராகுல் காந்தி பேசினார். அதுபோன்ற செயலை பாஜக மிசோரம் மாநிலத்தில் செய்வதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று மிசோரம் மக்களைக் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார்.
இதனிடையே மிசோரம் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு, தனது 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.