இந்தியாவின் உச்ச நீதிமன்றம், ஒரே பாலினத் திருமணத்திற்கு சட்டபூர்வ அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கும் உரிமை நீதிமன்றத்துக்கு இல்லை. நாடாளுமன்றம்தான் அது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று ஐவர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்திய மத்திய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள், இந்திய குடும்ப அமைப்புக்கு இது எதிரானது என்று வாதிட்டனர்.
ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே நடப்பதுதான் திருமணம் என்று அவர்கள் கூறினர்.
கடந்த 2018ஆம் ஆண்டில் ஒரே பாலின ஈர்ப்பு என்பது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்த நிலையில் ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இதன் தொடர்பில் ஏப்ரல், மே மாதங்களில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்விசாரணைகளில் மத்திய அரசு தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்தது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், எஸ்.ரவீந்திர பட், ஹீமா கோலி, பிஎஸ் நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.
இதில் நான்கு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
முதலில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பை வாசித்தார்.
“உச்ச நீதிமன்றத்தால் சிறப்புத் திருமணச் சட்டத்தை ரத்து செய்ய முடியாது. அதில் ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டத்தை சேர்க்கவும் முடியாது. திருமணங்கள் தொடர்பான சட்டங்களை நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும்தான் இயற்ற முடியும்,” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.
“ஒரே பாலினத் திருமண பந்தத்தில் இணைய உரிமையும் சுதந்திரமும் உள்ளது. ஆனால் தற்போதுள்ள சட்டத்தின்படி அவர்கள் அங்கீகாரம் பெற முடியாது. நாடாளுமன்றமும் சட்டமன்றங்களுமே ஒரே பாலினத் திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நீதிபதி பட், “திருமணப் பந்தங்களை சட்டங்கள்தான் அங்கீகரிக்கும். இந்த நீதிமன்றம் அதற்கான சட்டங்களை இயற்றும்படி அரசாங்கத்தை வலியுறுத்த மட்டுமே முடியும்,” என்றார்.
நீதிபதி கவுல், “ஒரே பாலினத் திருமணத்தை அங்கீகரிப்பதால் திருமண சமத்துவத்தில் அடுத்த அடியை எடுத்துவைக்கலாம்,” என்று குறிப்பிட்டார்.
ஆனால் அமர்வில் இடம்பெற்ற பெண் நீதிபதி ஹீமா கோலி, இந்த விவகாரத்தில் தீர்ப்பு எதுவும் வழங்கவில்லை.
இறுதியாக, ஒரே பாலினத் திருமணங்களுக்கு சட்ட உரிமையை நீதிமன்றம் தாமாக முன்வந்து வழங்க முடியாது என்று அமர்வு தீர்ப்பளித்தது.