அப்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் வரும் நவம்பர் 7ஆம் தேதி அங்குள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ல் நடைபெறுகிறது. அதற்கான மனுத்தாக்கல் கடந்த 20ஆம் தேதியுடன் முடிவடைந்தது. வேட்பு மனுத் தாக்கல் செய்த 174 பேரில் 16 பேர் பெண்கள் என்று தெரிகிறது.
மிசோரத்தில் ஆளும் கட்சியான மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) அனைத்து 40 தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளது. இதில் 25 பேர் சட்டமன்ற உறுப்பினர்கள். எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம் (இசட்பிஎம்) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக அனைத்துத் தொகுதிகளிலும் களம் காண்கின்றன. பாஜக 23 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 இடங்களில் போட்டியிடுகின்றன. சுயேச்சை வேட்பாளர்களாக 27 பேர் களமிறங்கி உள்ளனர்.
மொத்தம் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் காங்கிரஸ் வெளியிட்டது. தற்போதுள்ள 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது காங்கிரஸ். ஆளும் மிசோரம் தேசிய முன்னணி, சோரம் மக்கள் இயக்கம் தங்கள் கட்சி சார்பில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எம்என்எஃப் 26, இசட்பிஎம் 8, காங்கிரஸ் 5, பாஜக 1 இடங்களில் வெற்றி பெற்றன. பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் எம்என்எஃப் 2 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து, அக்கட்சியின் பலம் 28 ஆக அதிகரித்தது.
கடந்த தேர்தலில் வெறும் ஐந்து இடங்களையே பெற்ற காங்கிரஸ் இம்முறை இரு மடங்கு இடங்களை வெல்லும் என்றும் மிசோ தேசிய முன்னணி அல்லது சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.