தேஜ்பூர்: பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்றுபட வேண்டும் என்று இந்தியாவின் மத்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போர் குறித்து இவ்வாறு கருத்துரைத்த அவர், இந்தப் பிரச்சினையில் அப்பாவிப் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்றார்.
முன்னதாக, இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு அமைச்சர் ராஜ்நாத் சிங் அசாமுக்கும் அருணாச்சலப் பிரதேசத்திற்கும் சென்றார்.
திங்கட்கிழமை (அக். 23) அவர் அசாமில் உள்ள இந்திய ராணுவத்தினரைச் சந்தித்துப் பேசினார். தேஜ்பூரில் இந்திய ராணுவப் பிரிவினர் அளித்த விருந்தில் அவர் கலந்துகொண்டார்.
அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய திரு ராஜ்நாத் சிங், “பயங்கரவாதத்துக்கு எதிராக உலகம் ஓரணியில் ஒன்றுபட்டால், அப்பாவி மக்கள் பாதிக்கப்படமாட்டார்கள்,” என்றார்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை இந்தியா, 38 டன் நிவாரணப் பொருள்களை காஸா எல்லைக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
தமது பயணத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை, அமைச்சர் ராஜ்நாத் சிங், அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய ராணுவத்தினருடன் தசரா திருவிழாவைக் கொண்டாடினார்.