ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், முதல்வர் அசோக் கெலாட்டின் மகனுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை விடுத்துள்ளது.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அதன் ஐந்தாண்டுத் தவணைக்காலம் முடிவடையவிருக்கிறது.
இந்நிலையில், நவம்பர் 25ஆம் தேதி அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ராஜஸ்தானைப் பொறுத்தமட்டில் காங்கிரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சி முயல்கிறது. முதல்வர் அசோக் கெலாட், காங்கிரஸ் மாநிலத் தலைவர் சச்சின் பைலட் உட்பட மூத்த தலைவர்கள் கட்சி மேலிடத்துடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைஷ்ணவ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி உள்ளது. அந்நியச் செலாவணி விதிமீறல் தொடர்பான வழக்கில் நேரில் விளக்கம் அளிக்கும்படி அந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அவர் அக்டோபர் 27ஆம் தேதி நேரில் வரவேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மும்பையைச் சேர்ந்த ‘டிரைடன் ஹோட்டல்ஸ் அண்ட் ரெசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் பணமோசடி செய்ததாக புகாரின் அடிப்படையில் ஜெய்ப்பூர், உதய்ப்பூர், மும்பை, டெல்லி உட்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
அந்த நிறுவனத்தின் இயக்குனர் ரத்தன் காந்த் சர்மா, வைஷ்ணவ் கெலாட்டுடன் தொடர்பு வைத்துள்ளார். கார் வாடகை தொடர்பான விவகாரத்தில் இருவருக்கும் நெருங்கிய உறவு உள்ளது.
அதோடு வைஷ்ணவ் கெலாட், மொரீஷியசைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து ஹோட்டல் பங்கு வாங்கியதாகவும் அதற்கு கறுப்புப் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அந்த நிதி, டிரைடன் ஹோட்டல்ஸ் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்யப்பட்டதாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் வரும்படி வைஷ்ணவ் கெலாட் அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரும் மஹுவா சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான கோவிந்த் சிங் தோதாஸ்ராவுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி உள்ளனர்.
மேலும், தவுசா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஓம்பிரகாஷ் ஹட்லா உட்பட வேறு சிலரின் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் நெருங்கும் நிலையில் ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சோதனையைத் தொடங்கியுள்ளது குறித்தும் முதல்வரின் மகனுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது குறித்தும் காங்கிரஸ் கட்சியினர் குறைகூறியுள்ளனர். தேர்தல் நேரத்தில் மத்திய அரசு விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்துவதாக அவர்கள் சாடினர்.