நர்மதாபுரம்: மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் பகுதியில், காவல்துறை அதிகாரி அதுல் சர்மா, மூச்சற்ற நிலையிலிருந்த பாம்பைப் பிழைக்க வைத்துள்ளார்.
பாம்பின் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்றைச் செலுத்தி அவர் பிழைக்க வைத்த காணொளி இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நர்மதாபுரம் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர்க் குழாய் ஒன்றில் அந்தப் பாம்பு புகுந்தது. விஷத்தன்மையற்ற பாம்பு அது.
குழாயிலிருந்து பாம்பை வெளியேற்ற அங்கு வசிக்கும் மக்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை.
அதனால் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த தண்ணீரைக் குழாய்க்குள் ஊற்றினர். பின்னர் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தந்தனர்.
அப்போது அங்கு வந்த காவல்துறை அதிகாரி அதுல் சர்மா, தனக்குப் பாம்புகளை மீட்ட அனுபவம் உண்டு என்றார். பாம்பை நன்கு பரிசோதித்த அவர் அதன் வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்றைச் செலுத்தினார்.
பாம்பு சிறிது நேரத்தில் அசையத் தொடங்கியது. சுற்றியிருந்தோரின் கரவொலிக்கிடையே 15 ஆண்டுகளாக இதில் தனக்கு அனுபவம் உண்டு என்றார் அதுல் சர்மா.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவிவருகிறது.
உரிய பயிற்சி இல்லாமல் யாரும் இத்தகைய செயலில் இறங்கவேண்டாமென இணையவாசிகள் பலரும் பின்னூட்டமிட்டுள்ளனர்.