கலபுர்கி: நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தேர்தல்கள், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய அரை இறுதி ஆட்டம் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுர்கியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நடக்கவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை எதிர்க்கும் நிலையிலும் அதிருப்தி நிலையிலும் மக்கள் உள்ளனர்.
எல்லா மாநிலங்களிலும் வேலைவாய்ப்பின்மையும் விலைவாசி உயர்வும் மக்களுக்கு சிரமத்தைத் தந்துள்ளது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.
ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள்தான் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதற்கு அங்குள்ள ஆட்சியாளர்களே முக்கிய காரணம்.
சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக உள்ளனர். எனவே இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வலுவான இடங்களைப் பிடித்து ஆட்சியில் அமரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரை இறுதி ஆட்டமாக இருக்குமா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஒருபோதும் அவ்வாறு இருப்பதற்கு வாய்ப்பில்லை.
மாநிலத்திற்கு மாநிலம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெவ்வேறானவை. அதற்கேற்பவே தேர்தலின் முடிவுகள் இருக்கும்.
உள்ளூர் அளவில் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய தலைவர்களையே மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் தொடங்கும் என கார்கே தெரிவித்தார்.