திருட்டு திரைப்படங்கள் அனுமதியின்றி இணையத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான புகார்களைக் கையாள அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்குள் சட்டவிரோதமாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள திருட்டு திரைப்படங்களை மின்னிலக்கத் தளங்கள் அகற்ற வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் பொழுபோக்குத் துறையில் ஆண்டுதோறும் ஏற்படும் பல பில்லியன் நட்டத்தைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கையை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது.
திரைப்படங்கள் சட்டவிரோதமாக வெளியிடப்படுவதால் இவற்றைத் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் இல்லாமல்போவதுடன் பொழுதுபோக்குத் துறைக்கும் கணிசமாக இழப்பு ஏற்படுகிறது என்று தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். இந்தியாவின் திரைப்பட, பொழுதுபோக்குத் துறை இத்தகைய திருட்டுப் படங்களால் ஆண்டுக்கு ரூ.200 பில்லியனை (3.2 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) இழக்கிறது என்று இந்திய அரசாங்கம் முன்னதாகக் கூறியது.
காப்புரிமை வைத்திருப்பவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள், இதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகளை அணுகி சட்டவிரோதப் பதிவேற்றங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக்கொள்ளலாம்.
காப்புரிமை அல்லாத மற்றவர்களிடமிருந்து புகார் வந்தால் அந்தப் புகாரின் நம்பகத்தன்மையை அதிகாரிகள் ஆராய்ந்து முடிவு செய்வர்.
இவ்வாண்டு முற்பகுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்திற்கு மேலாக புதிய நடவடிக்கை இடம்பெறுகிறது.