புதுடெல்லி: இந்திய ராணுவத்தில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட உள்ளன. இது 2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரிக்கும் இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள், பிரிட்டன், இஸ்ரேல் போன்ற பல நாடுகளின் ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வகை ஹெலிகாப்டர்கள் மணிக்கு 289 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியவை. நெருக்கடியான வானிலையிலும் இவற்றைப் பயன்படுத்த முடியும். அத்துடன் ஒரே நிமிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்குகளை குறிவைத்து இவை தாக்குதல் மேற்கொள்ள முடியும். இதனால், இவை போரில் மற்ற நாடுகளின் போர் விமானங்கள், வானூர்திகளை குறி தவறாமல் தாக்கி அழிக்கும் திறன் பெற்றவை.
இந்தியா 2015ஆம் ஆண்டில் தனது ஆகாயப் படைக்காக 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்கி அவை தற்பொழுது சேவையில் உள்ளன.
இதைத் தொடர்ந்து மேலும் 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தற்பொழுது இந்திய ராணுவத்துக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணியில் போயிங் நிறுவனம் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி அடுத்த சில மாதங்களுக்குள் இந்த 6 அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் இந்திய ராணுவத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய ராணுவத்திற்கு பெரும் பலமாக விளங்கும் என்று கூறப்படுகிறது.