ஸ்ரீநகர்: காஷ்மீரில் பிணையில் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறை தொடங்கியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் 14 சிறைகள் உள்ளன. இந்தச் சிறைகளில் ஏறத்தாழ 5,000 விசாரணைக் கைதிகள் உள்ளனர். இதில் 740 பேர் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடையவர்கள். வழக்கு விசாரணையின்போது சில தீவிரவாதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அப்போது அவர்கள் தலைமறைவாகி மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டனர்.
இதைத்தடுக்க பிணையில் விடுவிக்கப்படும் தீவிரவாதிகளின் காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை காஷ்மீர் காவல்துறை தொடங்கி உள்ளது.
காஷ்மீரில் செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் குலாம் முகம்மது. தீவிரவாதிகளுக்கு நிதி, ஆயுத உதவிகளை வழங்கியது தொடர்பாக கடந்த 2007ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல ஆண்டுகள் சிறையில் இருந்த அவருக்கு ஜம்முவில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் அண்மையில் பிணை வழங்கியது.
கடந்த சனிக்கிழமை அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவரது காலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டது.
“அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பிணையில் விடுவிக்கப்படும் கைதிகளின் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுகிறது. இதே நடைமுறை இந்தியாவில் முதல்முறையாக காஷ்மீரில் தொடங்கப்பட்டு உள்ளது.
“நீதிமன்ற அனுமதியுடன் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய குலாம் முகம்மதுவின் காலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி உள்ளோம். இதன்மூலம் அவரது நகர்வுகளை 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். புதிய திட்டத்தால் பிணையில் விடுவிக்கப்படும் தீவிரவாதிகள் தலைமறைவாவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது தடுக்கப்படும்,” என்று காஷ்மீர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
நாட்டின் இதர மாநிலங்களிலும் இதே நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.