பாட்னா: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் கருத்து தெரிவித்தார்,
அந்தக் கருத்துகள் சர்ச்சைக்குரிய வகையில் அமைந்தன. அதற்காக மன்னிப்பு கேட்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புதன்கிழமையன்று சட்டமன்றத்துக்குச் சென்றபோது பிரதான நுழைவாயிலில் நின்று பாஜக உறுப்பினர்கள் அவரைத் தடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, நேராக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர், “எனது வார்த்தைகள் புண்படும் வகையில் இருந்திருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் வலியுறுத்தியுள்ளேன். பெண்களுக்கான அதிகாரம் மற்றும் முன்னேற்றத்திற்காக நான் எப்போதும் துணை நின்றுள்ளேன்,” என்று தெரிவித்தார்.
கல்வியறிவு பெற்ற பெண் தமது கணவனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது தனது கணவனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து விளக்கிப் பேசினார்.
அப்போது அவர், “கணவனின் செயல்கள் அதிக பிறப்பு விகிதத்துக்கு வழிவகுக்கின்றன. கல்வியறிவு பெற்ற பெண் இதனை எப்படி கட்டுப்படுத்தலாம் என்பதை நன்கு அறிவாள். இந்தக் காரணங்களினால் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளது. செய்தியாளர்கள் இதனை நன்கு அறிவார்கள். முன்பு 4.3ஆக இருந்த பிறப்பு விகிதம் தற்போது 2.9ஆகக் குறைந்துள்ளது. விரைவில் அது 2 ஆக குறையும்” என்று கூறியிருந்தார்.