பெங்களூரு: பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் மொத்தம் 6 பயணிகளே இருந்த நிலையில், அந்தப் பயணத்தை ரத்து செய்தது இண்டிகோ விமானச் சேவை நிறுவனம்.
ஆனால், அந்த விமானத்துக்குப் பதில் சென்னை செல்லத் தயாராக இருந்த வேறொரு விமானத்தில் அவர்களை ஏற்றிச் செல்வதாக தவறான தகவல் தந்து அந்த ஆறு பயணிகளும் தரையிறக்கப்பட்டனர்.
பின்னர் தரையிறங்கிய அந்த ஆறு பயணிகளும் தாங்கள் மோசம் போனதாக உணர்ந்தனர் என்றும் ஆறு பயணிகளே உள்ளதால் இண்டிகோ நிறுவனம் அந்த விமானத்தை இயக்க விரும்பவில்லை என்றும் அறிந்து கோபமடைந்தனர்.
அன்றிரவு வேறு எந்த விமானமும் சென்னைக்கு செல்லாததால் அந்த ஆறு பயணிகளும் பெங்களூரிலேயே தங்க நேரிட்டு திங்கட்கிழமைதான் சென்னை செல்ல முடிந்தது.
இதில் இண்டிகோ நிறுவனம் தங்களுக்கு ஹோட்டலில் தங்கும் வசதிகூட செய்து தரவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.
இதுபற்றிக் கூறிய இண்டிகோ நிறுவனம், அறுவரில் இரு பயணிகள் பெங்களூரு ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர் என்றும் மற்றவர்கள் விமான நிலையத்திலேயே தங்குவதாகக் கூறினர் என்றும் விளக்கியது.
பின்னர் அந்த ஆறு பயணிகளும் திங்கட்கிழமை காலை சென்னைக்கு விமானப் பயணம் மேற்கொண்டனர் என்றும் இண்டிகோ நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், இண்டிகோ நிறுவனம் தங்களிடம் பொய் கூறி தங்களை ஏமாற்றிவிட்டதாக பயணிகள் கோபத்துடன் கூறியுள்ளனர். இதில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.