புதுடெல்லி: பயங்கரவாதத்தை இந்தியா துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மனத்தின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.
அவர், மும்பை தாக்குதல் குறித்தும் அதிலிருந்து இந்தியா மீண்டு வந்தது குறித்தும் பேசியுள்ளார். 26/11 மும்பையில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தனது அஞ்சலியை செலுத்தியதுடன் இந்தியா அவர்களை என்றும் நினைவுகூரும் எனத் தெரிவித்துள்ளார்.
“நவம்பர் 26ஆம் தேதியை நம்மால் மறக்க முடியாது. இந்த நாடு கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொண்ட நாள். பயங்கரவாதிகள் மும்பையை மட்டுமில்லாது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்வுக்குள்ளாக்கினர். அந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு வந்ததும் இப்போது முழு துணிச்சலோடு பயங்கரவாதத்தை எதிர்ப்பதும் இந்தியாவின் திறனால் நடந்தவை,” எனப் பேசியுள்ளார்.
லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்துசென்று நவம்பர் 26, 2008 அன்று துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினர். இதில் 18 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 166 பேர் பலியாகினர். மும்பையில் 60 மணி நேரம் நீடித்த இந்த முற்றுகையில் பலர் காயமுற்றனர்.