பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் உடுப்பி, மங்களூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். அங்கு கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு மேலாக கம்பாளா போட்டியை அறுவடை முடிந்த பின்னர் பாரம்பரியமாக நடத்தி வருகின்றனர்.
ஆனால், இப்போது முதன்முதலாக பெங்களூரில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. அதைக் காண ஆர்வத்துடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர்.
பெங்களூருவில் கம்பாளா போட்டியைத் தொடங்கிவைத்துப் பேசிய முதல்வர் சித்த ராமையா, “பெங்களூருவில் கம்பாளா போட்டி நடத்துவதன் மூலம் கடலோர கர்நாடகாவின் பாரம்பரிய கலை உலகமெங்கும் பரவ வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தக் கலையின் வாயிலாக கடலோர கர்நாடக மக்களின் பண்பாட்டைப் பிறமொழியினரும் அறிந்துகொள்வார்கள்,” என்று கூறினார்.
இதுவரை கடலோரப் பகுதிகளில் மட்டுமே நடந்து வந்த கம்பாளா போட்டியை பெங்களூருவில் நடத்த வேண்டும் என கம்பாளா ஆர்வலர்கள் கோரி வந்தனர்.
இதையடுத்து முதல்வர் சித்தராமையா நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடத்த அனுமதி வழங்கினார்.
பெங்களூர் அரண்மனைத் திடலில் கம்பாளா பந்தயம் நடத்துவதற்காக பெரும் செயற்கை வயல்கள் உருவாக்கப்பட்டன.
பரிசளிப்பு விழா நடைபெறும் மேடைக்கு மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ் குமாரின் பெயர் சூட்டப்பட்டது.
கர்நாடக முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, சதானந்தகவுடா ஆகியோர் வெள்ளிக்கிழமை காலையில் தீபாராதனை வழிபாடு செய்து கம்பாளா போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட எருமைக் காளைகள் கம்பாளா போட்டியில் பங்கேற்றன.
மாலையில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர் சித்தராமையா பரிசுகளை வழங்கினார்.