புவனேஸ்வர்: தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன் ஒடிசா மாநிலத்தில் ஆளும் அரசியல் கட்சியில் சேர்ந்துள்ளார்.
இவர், 2000ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.
ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். கடந்த 2011ஆம் ஆண்டில் ஒடிசா முதல்வர் அலுவலக பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2019ல் நவீன் பட்நாயக் 5வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு வி.கே.பாண்டியனுக்கு ‘5டி செயலாளர்’ என்ற கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டது.
இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்வர் நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப்பணியில் இருந்து விடுவித்து அரசியலில் ஈடுபடுத்த முதல்வர் நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.
இதையடுத்து ஒடிசா முதல்வர் தனிச்செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார்.
இதன் பிறகு வி.கே.பாண்டியனுக்கு கேபினட் அமைச்சருக்கு இணையான அரசு பொறுப்பு வழங்கப்பட்டது.
இதற்கிடையே ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் திங்கட்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார்.