டேராடூன்: உத்தராகண்ட் சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அவர்கள் அனைவரும் எந்த நேரத்திலும் உயிருடன் மீட்கப்பட்டு வெளியே வரக்கூடும் என்று தெரிகிறது.
இமயமலை சூழ்ந்த வடக்கு மாநிலமான உத்தராகண்ட்டின் சில்க்யாராவில் உள்ள சுரங்கத்தில் தீபாவளி தினத்தன்று (நவம்பர் 12) 41 தொழிலாளர்கள் பணிபுரிந்துகொண்டு இருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சுரங்கத்தை விட்டு வெளியேறும் வழிகள் அடைபட்டன. இதனால், சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்கள் இரு வாரங்களுக்கு மேலாக உயிருக்குப் போராடி வருகின்றனர்.
அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் என ஏராளமான வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் கிடைமட்டத்தில் துளையிட்டு தொழிலாளர்களை மீட்கும் பணி தொடங்கியது. கடும் குளிரால் இந்தப் பணிகளில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்ட நிலையில், ஆகர் என்ற இயந்திரத்தின் மூலமாக இந்தத் துளையிடும் பணி நடைபெற்று வந்தது.
இருப்பினும், சுரங்கத்தில் உள்ள கான்கிரீட் கம்பிகள் குறுக்கிட்டதன் காரணமாக துளையிடும் பணி பாதிக்கப்பட்டது. ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் கான்கிரீட் கம்பிகளில் பட்டு உடைந்தன.
இதனால் பல மணி நேரம் மீட்புப் பணி தாமதமானது. இரும்புக் கம்பிகள், கம்பி வலைகள் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கின. அவற்றை அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்றது.
இந்தத் தடைகளை மீட்புப்பணியில் உள்ள வீரர்களை அனுப்பி சிறிய இயந்திரங்களைக் கொண்டு அகற்ற முடிவு செய்தனர்.
அந்தப் பணியில் தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்ட நிலையில், வேறு வழிகளில் மீட்புப் படையினர் தொழிலாளர்களை மீட்க முடிவு செய்தனர். அதன்படி செங்குத்தான வடிவில் துளையிட முடிவு செய்யப்பட்டு அந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.