மும்பை: இந்தியாவில் தங்க விலை முன்னெப்போதும் இல்லாத அளவு உச்சம் தொட்டது.
திருமணக் காலத்தில் தங்கத்துக்கான தேவை அதிகரித்திருப்பதும் உலகளவில் தங்க விலை அதிகரித்திருப்பதும் இதற்கான காரணங்களில் அடங்கும் என்று ஐஏஎன்எஸ் செய்தி தெரிவித்தது.
சென்னையில் சனிக்கிழமை காலை 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ.64,530ஆக உயர்ந்தது.
மும்பை, டெல்லி, பெங்களூரு, கோல்கத்தா ஆகிய பெருநகர்களில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.63,760ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை பதிவான விலையைவிட இது ரூ.810 அதிகம்.
அனைத்துலகச் சந்தையில் தங்க விலை ஏழு மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு அவுன்சுக்கு விலை 1.6 விழுக்காடு கூடி US$2,069.10 ஆனது.
இந்தியா பெரிய அளவில் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. உலகளவில் அதிகரித்துவரும் தங்க விலையால் உள்நாட்டுச் சந்தையில் நேரடியாக தாக்கம் ஏற்படுகிறது.
பிரதான நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து சரிந்து மூன்று மாதங்களில் ஆகக் குறைவான அளவைத் தொட்டுள்ளதால், அனைத்துலகச் சந்தையில் தங்க விலை ஏறுமுகம் கண்டு வருகிறது.
இதனால் தற்போதைய சூழலில் மற்ற நாணயங்களில் தங்கம் வாங்குவது விலைக் கட்டுப்படியாக உள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி வரும் மாதங்களில் வட்டி விகிதத்தை அனேகமாகக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் முதலீட்டாளர்கள் மற்ற வகை முதலீடுகளைவிட தங்கத்தின் பக்கம் ஈர்க்கப்படுவதுண்டு.
திருமணப் பருவம் காரணமாக உள்நாட்டுச் சந்தையில் தங்கத்திற்கான தேவை தொடர்ந்து வலுவாக உள்ளது.
“இந்த விலையுயர்வினால் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கத் தயங்குவர். பொதுவாகவே மார்கழி மாதத்தில் திருமணங்கள் நடக்காததால் வியாபாரம் சற்று குறைவாகவே இருக்கும். இச்சூழலில் இந்த விலையுயர்வு, பாதிப்பை சற்று அதிகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது,” என்று கூறினார் அபிராமி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிதி இயக்குநர் ராஜலட்சுமி கண்ணப்பன், 34.
“பல வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதை ஒரு முதலீடாகப் பார்க்கின்றனர். மேலும் பலருக்கு தங்கம் வாங்குவதில் உணர்வுபூர்வமான பந்தமும் உள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்க முன்வருவர் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார் ஜோய் ஆலுக்காஸ் ஃபேரர் பார்க் கிளையின் மேலாளர் அருண், 39.
“விலையுயர்வு காலத்தில் பொதுவாகவே தங்கம் வாங்குவதைத் தவிர்ப்போம். விலை ஒரு சீரான நிலையை எட்டும் வரை காத்திருந்து பிறகு வாங்குவோம். காத்திருப்பிற்கு பின் சில நேரங்களில் விலை குறையும் வாய்ப்பும் உள்ளது,” என்று கூறினார் குடும்பத் தலைவியான பிரியா ராம்குமார், 43.