கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்கள் மூலம் அடிக்கடி வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதனை சுங்கத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கொச்சி அனைத்துலக விமான நிலையம் வந்த மொய்தீன் என்பவர் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்.
அதைத்தொடர்ந்து அவரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
அதன்பின்னர் அவரது பயணப்பெட்டிகள் சோதனை செய்யப்பட்டன.
சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள், கார்கள் போன்ற பொருள்கள் அவர் பெட்டியில் இருந்தது. அவற்றை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தியதில், சுருள் வடிவில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
ரூ.18.79 லட்சம் மதிப்பிலான 352.40 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைத் தொடர்கிறது.
அண்மையில் சென்னை விமான நிலையத்தில் ரூ.4.55 கோடி மதிப்புள்ள 8.42 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு மட்டும் ரூ.112 கோடி மதிப்புள்ள 200 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டதாக, விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் ஸ்ரீனிவாச நாயக் தெரிவித்துள்ளார்.