திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கொச்சி ஒயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது மகள் அபிகேல் சாரா (6 வயது) கடந்த 27ஆம் தேதி மாலை, தனது சகோதரருடன துணைப்பாட வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று அந்தச் சிறுமியை குண்டுக்கட்டாகத் தூக்கி, காரில் போட்டுக் கொண்டு பறந்தனர்.
பின்னர் அந்தக் கடத்தல் கும்பல், சிறுமியின் தாயிடம் கைப்பேசியில் தொடர்புகொண்டு ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியது. அதையடுத்து சிறுமியின் தாயார் காவல்துறையில் புகார் செய்தார்.
அந்தச் சிறுமியின் சகோதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில், கடத்தல்காரர்களை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் கொல்லம் பகுதியில் தனியா நின்று கொண்டிருந்த சிறுமி சாரா-வை காவல்துறையினர் மீட்டனர்.
கடத்தல்காரர்கள் அந்தச் சிறுமியை அங்கு விட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். மீட்கப்பட்ட சிறுமியிடம் கடத்தல்காரர்களின் அடையாளம் குறித்து காவல்துறையினர் கேட்டனர்.
அப்போது அந்தச் சிறுமி, கடத்தல்காரர்களில் ஒரு மொட்டை மாமா இருந்தார் எனக் கூறினார். அதையடுத்து காவல்துறையினர் சந்தேகப்பேர்வழியின் புகைப்படத்தைத் தோராயமாக வரைந்து சிறுமியிடம் காட்டினர்.
சிறுமி உறுதி செய்ததும், அந்த அடையாளத்தைக் கொண்ட ஆடவர் சாத்தனூரைச் சேர்ந்த பத்ம குமார் என்பது உறுதியானது. தலைமறைவாகிவிட்ட பத்மகுமாரைத் தேடிய காவல்துறை அதிகாரிகள், அவரை தென்காசி மாவட்டத்தின் புளியரையில் கைதுசெய்தனர்.
பத்மகுமாரிடம் விசாரித்ததில், சிறுமியைக் கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார்.
பத்ம குமார் (52) என்ற அந்த ஆடவர், அவரது மனைவி அனிதா, மகள் அனுபமா ஆகிய மூன்று பேரிடமும் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சிறுமியின் தந்தையுடன் தனக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததும், அதன் காரணமாகவே சிறுமியை கடத்தியதாகவும் தெரிவித்தார்.
பத்மகுமார் தனது மகளை தாதியர் பயிற்சியில் சேர்ப்பதற்காக சிறுமியின் தந்தை ரெஜி ஜானிடம் ரூ.5 லட்சம் கொடுத்திருக்கிறார்.
ஆனால் அவர் தாதியர் பயிற்சியில் சேர்த்துவிடவுமில்லை. மேலும் அதற்காக வாங்கிய பணத்தை திருப்பியும் கொடுக்கவில்லை. அந்தப் பணத்தை திரும்பி வாங்குவதற்கு ஓர் ஆண்டாக ரெஜி ஜானிடம் கேட்டு நடைநடையாய் நடந்திருக்கிறார். ஆனால் பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை.
இதன்காரணமாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்சினை காரணமாகவே ரெஜி ஜானின் மகளை பத்மகுமார் கடத்தியது தெரியவந்திருக்கிறது.