ஃபதேஹ்பூர்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபதேஹ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்திக் வர்மா,32.
நெதர்லாந்தில் ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வந்த அவருக்குத் தன்னுடன் பணியாற்றும் கேப்ரியலா ட்யூடா, 21, என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. சில மாதங்கள் கழித்து அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
ஹர்திக் இந்து சமயத்தைச் சேர்ந்தவர்; கேப்ரியலா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்.
கடந்த வாரம் ஹர்திக், கேப்ரியலாவைத் தனது சொந்த கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். கேப்ரியலாவுடன் நெருங்கிப் பழகிய ஹர்திக்கின் குடும்பத்தினர், இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் அந்த கிராமத்தில் உள்ள மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், கேப்ரியலாவின் பெற்றோரும் உறவினர்களும் கலந்துகொள்வர் என்று கூறப்படுகிறது.
பின்னர் ஹர்திக்-கேப்ரியலா தம்பதி, நெதர்லாந்து சென்று, அங்கு கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேறுபாடுகளைக் கடந்து இணைந்த இருவருக்கும் சமூக ஊடகங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.