புதுடெல்லி: மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி பிரமுகர்களின் இல்லங்கள், தொழிற்கூடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி நன்கொடை வசூலிக்கக் கற்றுத்தரும் ஊழல் பள்ளியை பிரதமர் மோடி நடத்தி வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
ஆளும் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதையும் பாஜகவின் வெற்றி வாய்ப்பை சரிப்பதையும் இலக்காகக் கொண்டு தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் மோடியையும் பாஜகவையும் கடுமையாகக் குறைகூறியுள்ளார்.
“பிரதமர் மோடி இந்தியாவில் ஊழல் பள்ளிக்கூடத்தை நடத்தி வருகிறார். எதிர்க்கட்சியினர் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது ஏன்? மத்திய விசாரணை முகவர்கள் துணையோடு ‘பிணை- சிறை’ விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது?” என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார் ராகுல்.
”இந்தியா கூட்டணி தலைமையிலான அரசு அமைந்ததும் பாஜகவின் ஊழல் பள்ளிக்கு பூட்டு போடப்பட்டு மூடும்படி செய்யப்படும்,” எனவும் அவர் உறுதி அளித்திருந்தார்.
இந்தப் பதிவுக்குப் பொருத்தமாக ராகுல் காந்தி இணைத்திருக்கும் பிரசார காணொளியும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதனிடையே, கேரளாவின் திருச்சூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், பாஜகவின் புதிய தேசத்தில் நாட்டுக்காக உழைக்கும் விவசாயிகளை தேச விரோதிகள் என்றும் பயங்கரவாதிகள் என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி புகார் கூறி இருக்கிறார்.