இம்பால்: மணிப்பூரில் கடந்த 19ஆம் தேதி முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவின்போது குறிப்பிட்ட சில வாக்கு நிலையங்களில் கலவரச் சம்பவங்களும், வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்திய சம்பவங்களும் இடம்பெற்றன.
இது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, 47 வாக்கு நிலையங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கே.மேகசந்திரா மனு அளித்தார்.
இந்நிலையில், மணிப்பூரில் திங்கட்கிழமை (ஏப்ரல் 22) அன்று 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த 11 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 19ஆம் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் முதற்கட்ட தேர்தலில் 72 விழுக்காடு வாக்குகள் பதிவானது.