சண்டிகர்: ஹரியானாவில் உடல்களை எரியூட்டும் தகன மேடை சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளன.
ஹரியானா மாநிலம், குருகிராம் அருகே உள்ள அர்ஜுன் நகரில் எரியூட்டு மயானம் ஒன்று உள்ளது. அதனைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. சுவரின் பக்கத்தில் சடலங்களை எரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் சுற்றுச்சுவர் அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சுற்றுச்சுவர் சரிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தான்யா, 11, தேவி தயாள், 70, மனோஜ் காபா, 54, கிருஷ்ணகுமார், 52, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவத்தைக் கண்டு பதறியவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கி இருந்த நால்வரது உடல்களையும் மீட்டனர்.
படுகாயம் அடைந்த தீபா பிரதான் என்பவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளின் பாரம் காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காவலர்களின் விசாரணை தொடர்கிறது.