அமராவதி: ஆந்திரத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ‘நவரத்னலு ப்ளஸ்’ என்ற பெயரில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சனிக்கிழமை (ஏப்ரல் 27) வெளியிட்டார்.
நிறைவேற்றமுடியாத எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘நவரத்னலு’ என்ற பெயரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இதில் மேலும் சில மாற்றங்களைச் செய்து இப்போது ‘நவரத்னலு ப்ளஸ்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை ஜெகன் மோகன் வெளியிட்டுள்ளார்.
அதில், முக்கிய வாக்குறுதிகளாக, விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ.13.500ல் இருந்து ரூ.16,000 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பயிர்களுக்கான வட்டியில்லாக் கடன் வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும்.
“பெண்களுக்கான ‘அம்மா வோடி’ திட்டப் பெண் பயனாளிகளுக்கான ஊக்கத்தொகை 15,000 ரூபாயில் இருந்து 17,000 ரூபாயாக உயர்த்தப்படும்.
“45 முதல் 60 வயது வரையிலான பெண் பயனாளிகளுக்கான ‘ஒய்எஸ்ஆர் சேயுதா’ நிதியுதவித் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
“ரூ.3000ஆக வழங்கப்பட்டு வந்த நல ஓய்வூதியத் தொகை ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
“ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் அமராவதியைப் போல விசாகப்பட்டினம், கர்நூல் ஆகிய நகரங்களையும் சேர்த்து மொத்தம் மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படும்,” என மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி நடைபெற உள்ளது.
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 175 சட்டமன்றத் தொகுதிகள், 25 மக்களவைத் தொகுதிகள் என அனைத்து இடங்களிலும் தனித்துக் களம் காண்கிறது.
இன்னொரு புறம், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கின்றன.
இந்த இரு அணிகளையும் எதிர்த்து களத்தில் நிற்கிறார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா.