குஜராத்: இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை (மே 7) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்களிப்பில் அங்கித் சோனி எனும் ஆடவர் கால் பெருவிரலைப் பயன்படுத்தி வாக்களித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்குமுன் மின்சாரம் தாக்கியதில் இரு கைகளையும் இழந்ததாகக் கூறும் இவர், வாக்களித்ததன் அடையாளமாக எளிதில் அழிக்க முடியாத மையைத் தன் கால் கட்டைவிரலில் பூசும்படி தேர்தல் அதிகாரியிடம் கேட்டுக்கொண்டார்.
நடியாட் வாக்குச்சாவடியில் வாக்களித்த இவர், தன் பாதங்களைப் பயன்படுத்தியே பல அன்றாட நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதாகக் கூறினார்.
உடற்குறை இவரது உள்ளத்தைப் பாதிக்கவில்லை. இவர் பட்டக்கல்வியோடு வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் அங்கித் சோனி கேட்டுக்கொண்டார்.
இந்திய நேரப்படி மாலை 5 மணி நிலவரப்படி, குஜராத்தில் 55.2 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாக இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.