அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை முன்னிட்டு, 64 அணிகளைக் கொண்டு நடைபெற்ற மாபெரும் கபடி போட்டி டிசம்பர் 10, 17ஆம் தேதிகளில் வெளிநாட்டு ஊழியர்களின் பொழுதுபோக்கு நிலையங்களில் நடைபெற்றன.
‘ஹோப் இனிஷியேட்டிவ்’ கூட்டணியின் ‘ஏஜிடபுள்யூஓ’ எனும் வெளிநாட்டு ஊழியர் உதவிக்குழுவும் ‘லவ் அண்ட் கம்ஃபர்ட்’ அறநிறுவனமும் இணைந்து இப்போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தன. மனிதவள அமைச்சும் ‘ஏஎஸ்கே’ நிறுவனமும் ‘லைஃப் சென்டர்’ சமூக நிலையமும் இவற்றுக்கு ஆதரவளித்தன.
டிசம்பர் 10ஆம் தேதி கொக்ரேன் பொழுதுபோக்கு நிலையத்தில் நடந்த முதல் சுற்றுப் போட்டியின் நிறைவில் தகுதிபெற்ற 32 அணிகள், டிசம்பர் 17ஆம் தேதி கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் மோதின.
24-15 என்ற புள்ளிக்கணக்கில் ‘இலுப்பூர் பூவை அம்பாள்’ அணியைத் தோற்கடித்து முதல் நிலையைக் கைப்பற்றியது ‘ஏஎஸ்கே & ரஞ்சித்’ விளையாட்டுக் குழு.
முதல் நான்கு குழுக்களுக்கு வெற்றிக் கோப்பையும் ரொக்கப் பரிசும், தலைசிறந்த விளையாட்டாளர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
‘ஹீரோ கோட்’ பாதுகாப்புச் சவால்
டிசம்பர் 17ஆம் தேதி, கிராஞ்சி பொழுதுபோக்கு நிலையத்தில் மாலை 5 முதல் இரவு 9 மணி வரை ‘ஏஜிடபுள்யூஓ’வும் ‘ஃபியூஷன் சேஃப்டி மேனேஜ்மண்ட்’ நிறுவனமும் இணைந்து ‘ஹீரோ கோட்’ எனும் பாதுகாப்புச் சவாலை நடத்தின.
இச்சவால், வெவ்வேறு விளையாட்டுச் சாவடிகள் மூலம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பான வேலையிடச் சூழலின் அவசியத்தையும் அதை உண்டாக்கும் வழிமுறைகளையும் உணர்த்தியது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தசைப்பிடிப்புச் சேவை வழங்கப்பட்டதோடு, சிங்கப்பூர் காவல்துறையின் மோசடித் தடுப்பு விழிப்புணர்வுச் சாவடியும் இடம்பெற்றது.
ஊழியர்களுக்கு கோழிப் பிரியாணியும் குலுக்கல் முறையில் எட்டு மிதிவண்டிகள், 20 திறன் கடிகாரங்கள், 20 ‘புளூடூத்’ தலையணி ஒலிவாங்கிகளும் வழங்கப்பட்டன.
கபடிப் போட்டிகள், ‘ஹீரோ கோட்’ பாதுகாப்புச் சவால் இரண்டிலும் பங்கேற்ற சுமார் 4,000 ஊழியர்களுக்கு அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிகள் டிசம்பர் முழுவதும் நடைபெறும் ‘டுகெதர் இன் சிங்கப்பூர்’ இயக்கத்தில் இடம்பெறுகின்றன.