தங்குமிடத்தில் பிரச்சினை, வேலை இடத்தில் பிரச்சினை என சில சவால்மிக்க தருணங்களில் சக ஊழியர்களுக்கு வழிகாட்டுகிறார் வெளிநாட்டு ஊழியர் நிலையத் தொண்டூழியர் செல்வராசு ராஜசேகரன், 33.
தொடக்கத்தில் சிங்கப்பூருக்கு வந்தபோது தேவைப்படும் உதவிகளுக்காக எங்கு செல்வது என்று தெரியாமல் திகைத்திருந்ததை 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றும் திரு செல்வராசு நினைவுகூர்ந்தார்.
“இப்படி ஓர் அமைப்பு உள்ளது என்பது ஊழியர்கள் சிலருக்குத் தெரியாமல் போவதால் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவி செய்வேன்,” என்று கூறினார்.
லிட்டில் இந்தியா வட்டாரத்தின் பெர்ச் ரோடு திறந்த வெளியில் ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 17) நடைபெற்ற அனைத்துலக ஊழியர்கள் தின நிகழ்ச்சில் திரு செல்வராசு உட்பட, மொத்தம் 23 வெளிநாட்டு ஊழியர் நிலையத் தூதர்கள் மேடையில் விருதுகளைப் பெற்றனர்.
அந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 12,000 ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்தியா, இலங்கை பங்ளாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கட்டுமான ஊழியர்கள், பணிப்பெண்கள் எனப் பலரும் வருகை அளித்தனர். தற்காப்புக்கான மூத்த துணையமைச்சரும் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் துணை தலைமைச் செயலாளருமான ஹெங் சீ ஹாவ் நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
அரசுசாரா அமைப்புகள், சமூகப் பங்காளிகள், வெளிநாட்டுத் தூதரகங்கள், உணவகங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை மொத்தம் 20 முகப்புகளை அமைத்தன. நிகழ்ச்சியின்போது ஊழியர்களுக்கு உணவுப்பொருள்களும் 9,000க்கும் மேற்பட்ட அன்பளிப்புப் பைகளும் வழங்கப்பட்டன. அத்துடன், உடல்நல பரிசோதனைக்கூடம் ஒன்றும் அமைக்கப்பட்டது.
விருது பெற்ற மற்றொருவரான முனியாண்டி பாலசாமி, 30, மருந்து உதவி நிலையத்தில் ஆங்கிலம் சரியாகத் தெரியாத மூத்தத் தமிழர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சோதனைகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை விளக்கியதாகக் கூறினார்.
“ஊழியர்களுக்கான நிகழ்ச்சிகளை நடத்த உதவுவதுடன் புதிய ஊழியர்களுக்கும் வழிகாட்டுவேன்,” என்றார் சிங்கப்பூரில் 10 ஆண்டுகளாகப் பணிபுரியும் திரு முனியாண்டி.
இந்நாட்டுக்குச் சேவையாற்றும் இந்த வெளிநாட்டு ஊழியர்களைப் பாராட்டி மகிழ்விப்பதே நிகழ்ச்சியின் நோக்கம் என்று மனிதளவ அமைச்சின் ‘ஏஸ்’ எனப்படும் தொடர்பு மற்றும் ஈடுபாட்டுப் பிரிவின் அதிகாரி ஃபாத்திமா பேகம் நாஸிர் முகம்மது கூறினார் .