விரல் நுனியில் உலகை அடக்கியது தொடங்கி, மெய்நிகர் உதவி, தானியங்கி வாகனங்கள் வரை செயற்கை நுண்ணறிவின் பரிணாம வளர்ச்சி வியப்பூட்டுகிறது.
அடுத்த பத்தாண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் முக்கிய இயக்கியாக செயற்கை நுண்ணறிவு விளங்கும் என்கின்றன ஆய்வுகள்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு சிங்கப்பூர் நிறுவனங்களின் தயார் நிலை:
இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த நிறுவனங்கள் இன்னும் தயாராகவில்லை என்கிறது சிஸ்கோ நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வு.
சிங்கப்பூரில் உள்ள 14% நிறுவனங்கள் மட்டுமே செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த முழுமையாகத் தயாராக இருப்பதாகச் சொல்கிறது அந்த ஆய்வறிக்கை.
நிறுவனங்கங்களின் உத்தி, உள்கட்டமைப்பு, தரவு, நிர்வாகம், திறமை, கலாசாரம் உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொண்டு சிஸ்கோ நிறுவனம் நடத்திய ஆய்வில், 97 விழுக்காட்டு சிங்கப்பூர் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரித்துள்ளது.
எனினும், அதனைப் பயன்படுத்த முழுமையாகத் தயார்நிலையில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனத் தெரியவந்துள்ளது.
மின்னிலக்கப் பொருளாதாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க, வணிக நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைத் தழுவுவது அவசியம் என கருதுவதாகச் சொல்கிறார், உலகின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் பொறியாளர் ஹேமந்த் முரளி, 28.
“குறைந்த எண்ணிக்கையிலான நிறுவனங்கள் மட்டுமே தயார்நிலையில் உள்ளன என்பதை, இன்னும் 87 விழுக்காட்டு நிறுவனங்கள் அவற்றைத் தயார்ப்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டில் கொண்டுவரும்போது தொடக்கத்தில் சவால்களைச் சந்திப்பது வழக்கம்தான். தொடர் முயற்சியால் அவற்றைத் தகர்த்து எல்லா நிறுவனங்களும் எதிர்காலத்தில் முழுமையாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் கொள்ளும் என நம்புகிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தானியங்கித் தொழில்நுட்பத்தின் தொடக்க காலத்திலிருந்து பணியாற்றி ஓய்வுபெற்ற திரு சதீஷ், 69, சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, உரிய வழிகாட்டுதலோடு எதிர்காலத்தில் விரைவான வளர்ச்சியைச் சந்திக்கும் என்று குறிப்பிட்டார்.
மற்றொரு தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர் வைதீஸ்வரன், “நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலை வந்துவிட்டது. நிறுவனங்கள் அதனை எங்கு, எதற்காகப் பயன்படுத்தினால், அதன் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்கிற ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. கூடிய விரைவில் சரியான முறையில் அது செயல்படுத்தப்படும் என நம்புகிறேன்,” என்றார்.
தரவுகளின் ரகசியத்தன்மை:
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிக்கும் அதேவேளையில், அதற்குப் பயன்படுத்தப்படும் தரவுகளின் ரகசியத் தன்மை குறித்த கேள்விகளும், அபாயங்களும் முன்நிற்கின்றன.
சிஸ்கோ நிறுவன ஆய்வின்படி சிங்கப்பூரில் 36 விழுக்காட்டு நிறுவனங்கள், தரவுப் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பத்தை முழுமையாகக் கொண்டுள்ளன.
இதுகுறித்துக் கருத்துரைத்த வைதீஸ்வரன், “ இணையப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் ரகசியத் தன்மைக்கு சற்றே பாதுகாப்பின்மை இருக்கலாம். ஆனால் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டால் அது அதிகரிக்கும் என்று சொல்வதற்கில்லை,” என்கிறார்.
மேலும், “அனைத்துக் கேள்விகளுக்கும் தீர்வளிக்கும் தொழில்நுட்பத்தைப் பார்க்கும்பொழுது, அது அனைத்துத் தகவல்களையும் ஒப்புதலின்றி சேகரித்து வைத்து இருப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் பொதுவாக அப்படி நடப்பதில்லை. இயந்திரக் கற்றலில் தனிநபர் தரவுகளுக்கான மதிப்பும் முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது,” என்றார்.
“தரவு சேகரிப்பின் வெளிப்படைத்தன்மை நெறிமுறைப்படுத்தப்பட்டால், இதனை எளிதில் தடுக்கலாம். தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் அதேவேளையில் ஒரு தொழிநுட்பத்தால் சமூகத்திற்கு விளையும் நன்மைகளையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்,” என்கிறார் ஹேமந்த் முரளி.
மேலும், நிறுவனங்களும் தொடர்ந்து பயனர்களின் நம்பிக்கையைப் பெற, ஆய்வுகளை மேற்கொண்டு, அமைப்புகளை அவ்வப்போது முறைப்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
உலக அளவில் மருத்துவம், தகவல் தொடர்பு, போக்குவரத்து என அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வீட்டை ‘ஸ்மார்ட் ஹோம்’ எனும் அறிவார்ந்த இல்லமாக்குவதில் தொடங்கி, நுட்பமான மரபணு ஆராய்ச்சி வரை உதவும் தொழில்நுட்பங்களை வரவேற்க உரிய செலவுத் திட்டங்களையும் நிறுவனங்கள் செய்துவருவதைக் கோடிட்டுக் காட்டுகின்றன ஆய்வுகள்.