நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற 14வது சொற்களத்தின் இறுதிப் போட்டியில் வாகை சூடியது செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையம்.
சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் வாதங்களை முறியடித்து அவர்கள் வெற்றியைத் தழுவினர். அரையிறுதிப் போட்டியிலேயே சிறந்த பேச்சாளராக உருவெடுத்த இட்ரிஸ் அஹமது, இறுதிப் போட்டியிலும் அவ்விருதை வென்றார்.
மக்கள் கழக நற்பணிப் பேரவை, மத்திய வட்டார இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது சொற்களம் 2024.
தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழிக் கற்றல், வளர்ச்சிக் குழு, மீடியாகார்ப் வசந்தம் ஆகியவற்றின் துணையோடு வசந்தம் ஒளிவழியில் இறுதிச்சுற்று ஏப்ரல் 14ஆம் தேதி நேரடி ஒளிபரப்பானது.
இவ்வாண்டு சொற்களத்தில் 29 பள்ளிகள் பங்கேற்றன. இரு முன்னோடிச் சுற்றுகள், காலிறுதி, அரையிறுதிச் சுற்றுகளுக்குப் பின்னர் சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியும் செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையமும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றன.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தொடர்பு, தகவல் மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி வருகையளித்தார்.
முதல் சுற்றில் “சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைவதற்குப் பரபரப்பான வாழ்க்கைமுறையே காரணம்” எனும் தலைப்பை சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒட்டிப் பேசியது.
பணிச்சுமை, பெற்றோரின் பராமரிப்புக்கு அங்குமிங்கும் அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் போன்றவற்றால் ஏற்படும் பரபரப்பான வாழ்க்கைச் சூழல், வயது கடந்த திருமணத்தையும் உடல்நலப் பிரச்சினைகளையும் விளைவித்து பிறப்பு விகிதத்தைக் குறைப்பதாகக் கூறினர் சீடார் பள்ளி மாணவிகள்.
ஒவ்வொருவரின் மனப்போக்கிற்கும் ஏற்ப பரபரப்பான வாழ்க்கைமுறைக்கான அர்த்தம் மாறும் என்றும் பரபரப்பான வாழ்க்கைமுறையைக் கொண்டுள்ள மற்ற நாடுகளிலும் பிறப்பு விகிதம் அதிகமாகத்தான் உள்ளது என்றும் செயிண்ட் ஜோசஃப் தனது வாதத்தைத் தொடங்கியது.
சுதந்திரத்திற்கு முன்னுரிமையையும் குழந்தையைப் பராமரிக்கும் செலவினங்களையும் அது சுட்டியது.
இரண்டாம் சுற்றுக்கான தலைப்பு, “இளையர்களுக்கு வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபாடு குறைய கணினி, கைப்பேசியே காரணம்”. அதை ஒட்டிப் பேசியது செயிண்ட் ஜோசஃப். இணைப்பாட நடவடிக்கைகளையும் வீட்டிலேயே கற்கக்கூடிய கலைகளையும் சுட்டி எதிர்வாதம் செய்தனர் சீடார் பெண்கள்.
“இருதரப்பினரும் நன்கு ஆராய்ந்து விவாதம் செய்தனர். சீடார் பெண்கள் சிறப்பாகத் தொடங்கினார்கள். செயிண்ட் ஜோசஃப் பேச்சாளர்கள் அனைவரும் வீட்டில் பேசும் சொல்லாடலைப் பயன்படுத்தி மக்களைக் கவர்ந்தார்கள்.
“இரண்டாம் சுற்றிலும் தலைப்பு செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலையத்துக்குச் சாதகமாகப் போனது. அதை மாணவர்கள் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். கருத்துத் தெரிவிக்க ஐந்து வாய்ப்புகளையும் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தினார்கள்,” என்றார் மூன்று நடுவர்களில் ஒருவரும் தமிழ் முரசு நாளிதழின் இணை ஆசிரியருமான வீ.பழனிச்சாமி.
“முதல் தலைப்பு தொடக்கத்தில் கடினமாகத் தோன்றினாலும் நாங்கள் நன்கு ஆராய்ந்து எங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டோம். இரண்டாம் சுற்றுத் தலைப்பும் மாணவர்களின் வயதுக்கு உட்பட்ட தலைப்பு,” என்றார் செயிண்ட் ஜோசஃப் கல்வி நிலைய தமிழ்த் துறை ஒருங்கிணைப்பாளர் செல்வராணி.
“இரு தலைப்புகளும் எங்களுக்குச் சற்று கடினமாகத்தான் இருந்தன. எங்கள் மாணவிகள் விதிமுறைகளுக்கேற்ப கருத்துகளைத் தொகுத்து சிறப்பாகப் பேசினர்,” என்றார் சீடார் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியை லோகநாதன் சுதா.
“சிங்கப்பூரில் வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பினால்கூட முன்கூட்டியே பதிவுசெய்தால் ஒழிய பயிற்சிக் கூடங்களைப் பயன்படுத்த முடியாது. இதையும் மாணவர்கள் கூறியிருந்தால் இரண்டாம் சுற்று வாதம் வலுவடைந்திருக்கும்,” என்றார் பார்வையாளராக வந்த தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன்.