இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் பறைசாற்றும் ஆயக்கலைகள் பல. அவற்றில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளைச் சிறுவர்களுக்கு சென்ற சனிக்கிழமை (ஏப்ரல் 6) அன்று ‘கேம்ப் வெற்றி’ எனும் சிறுவர் முகாம் அறிமுகப்படுத்தியது.
தமிழ்மொழி மாதத்தின் ஓர் அங்கமாக நடந்தேறிய இந்த முகாம், ‘க்ரியேட் எஸ்.ஜி’ எனும் சமூக நிறுவனத்தின் முதல் தமிழ் மொழி விழா பங்கேற்பாகும்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தில் (சிண்டா) நடந்தேறிய இந்த முழு நாள் முகாமில் மொத்தம் 25 சிறுவர்கள் கலந்து கொண்டனர். மரபு மிகுந்த நடனம் மற்றும் பாடல் வடிவங்கள் சிறு பட்டறைகளின் மூலம் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. முகாமின் இறுதியில் கலை நிகழ்ச்சி ஒன்றும் படைக்கப்பட்டது.
முகாமில் சிறப்பு விருந்தினராக வருகை அளித்த அவாண்ட் நாடகக் குழுவின் நிர்வாகி மற்றும் இயக்குநர் செல்வா, சிறுவர்களுக்கு மொழி மற்றும் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
சிறுவயதிலேயே கலையின் மீது ஆர்வம் கொள்பவர்கள் கலைஞர்களாக உருவாகிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகள் கலைக் குடும்பத்தில் பிறக்காதவர்களுக்கும் கலையின் மீது ஆர்வத்தை உண்டாக்குகிறது.
“கலையின் மேல் உள்ள பற்று சிறு வயதிலேயே தொடங்க வேண்டும் - அவ்வாறு கலைஞர்கள் பிறப்பதுண்டு. இது போன்ற நிகழ்ச்சிகள் பாரம்பரிய கலைகளுக்கு பெரிதும் வழிவகுக்கிறது.”
முகாமில் கலந்துகொண்ட சிறுவர்களுடன் அவர்களது பெற்றோரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
“நாம் வாழும் நவீன உலகத்தில் நம் பிள்ளைகள் இதுபோன்ற முகாம்களில் கலந்துகொள்வதால் மொழி, கலாசாரம் பற்றி அறிந்துகொள்கின்றனர். இது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாக அமையும்,” என்றார் கலாராணி ஜனெஸா ஜஸ்டின், 44.
தனது மகன் டயாணனுக்கு வீட்டில் அதிக தமிழ் ஈடுபாடு இல்லாததால், ‘கேம்ப் வெற்றி’ போன்ற முகாம்கள் அவருக்கு பெரிதும் உதவுகின்றன என்றார் கவிதா தட்சிணாமூர்த்தி, 41.
“வகுப்பறைகளைக் கடந்து மொழி, கலாசாரத்தில் ஈடுபட இதுபோன்ற நிகழ்ச்சிகள் வழிவகுக்கின்றன. இது அவர்களுடைய கற்றலை மேம்படுத்துகிறது. இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் “ஆற்றல்” எனும் கருப்பொருளை மனதில் கொண்டு பிறந்தது இந்த முகாம், என்றார் “க்ரியேட் எஸ்.ஜியின்” துணை நிறுவனர் தேவி விஜயன், 35.
“ஒவ்வொரு சிறுவர், சிறுமியின் தனித்துவமான ஆற்றலை வெளிக்கொண்டு வருவதே இந்த முகாமின் முக்கிய நோக்கம். மொழியும் அதனுடன் இணையும் கலாசாரம் மரபு ஆகியவற்றைப் பேணிக் காக்க வேண்டும். அவர்கள் கற்றுக்கொள்ளும் கலை வடிவங்களின் விரிவாக்கமான நுணுக்கங்கள் தமிழ் மொழியின் அடையாளம் என்றால் அது மிகையாகாது. இந்த கேம்ப் வெற்றி பெற்றுள்ளதால் தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை க்ரியேட் எஸ்.ஜி தொடர்ந்து அளிக்கும்,” என்றார் தேவி.