ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் ஆகிய சமூக ஊடகத் தளங்களில் இடம்பெற்ற பொய்யான விளம்பரங்கள் மூலம் சென்ற ஆண்டு செப்டம்பரிலிருந்து குறைந்தது ஐந்து பேர் $167,000 இழந்திருப்பதாக காவல்துறை தெரிவித்தது.
அத்தகைய மோசடிச் சம்பவங்கள் பலவற்றில், பாதிக்கப்பட்டவர்கள் சீனப் புத்தாண்டு பலகார விற்பனை விளம்பரங்களைச் சொடுக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு விற்பனையாளர்களைத் தொடர்புகொள்ள அவர்கள் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் தளங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். உணவுப் பொருள்களை வாங்குவதற்கு ‘ஏபிகே’ எனும் மென்கோப்பைப் பதிவிறக்கம் செய்யுமாறு அவர்களிடம் கூறப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த மென்கோப்பு மூலம், மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவர்களின் கருவிகளிலிருந்து வங்கித் தகவல்களையும் கடவுச்சொற்களையும் திருட முடியும். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து அனுமதி இல்லாமல் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.
பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு காவல்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
மோசடிகள் குறித்த மேல்விவரங்களுக்கு, பொதுமக்கள் www.scamalert.sg எனும் இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-722-6688 என்ற மோசடி எதிர்ப்புத் தொலைபேசிச் சேவை எண்ணை அழைக்கலாம்.